Art by : Maya Angelou
கருவறை இருள்
அவள் வீட்டுக்கு ஓடி வந்தாள்
கடும் மூச்சுத் திணறலின் கருவறை இருளிலிருந்து
வெண் கண்ணீர்த் துளிகள்
அவள் முகச் சமவெளியில்
தங்க ஐசிக்கிள் (Icicle) என
அவள் வீட்டுக்கு ஓடி வந்தாள்
அவள் தரையில் தவழ்ந்தபடி வந்தாள்
சூடான இதயத்திற்காக
கருங் கரங்கள் காத்திருந்தன
ஏலியன்களின் கனவுகள்
அவளது செழிப்பான
களி மண் நிற முகத்தை மறைத்தன
அவள் தரையில் தவழ்ந்தபடி வந்தாள்
குற்றமற்றவளாக அவள் வீட்டுக்கு வந்தாள்
வடக்குக் காற்றின் மிரட்டல்கள்
பாலைவனத்தின் முகத்தில் இறக்க,
ஹகரின் மகளைப் போல கூடுதல் கறுப்பாக
ஷெபாவின் மகளைப் போல உயரமாக
குற்றமற்றவளாக அவள் வீட்டுக்கு வந்தாள்.
………………………………………………………………………………………………………………
Icicle என்பது ஒழுகிய நிலையிலேயே உறைந்த பனியைக் குறிக்கிறது.
மேலும், கண்ணாடியாலோ அல்லது தங்கத்தாலோ
செய்யப்பட்ட இது ஆபரணமாகவும் அலங்காரப் பொருளாகவும்
பயன்படுத்தப்படுகிறது.
இதைத்தான் கவிஞர், ஒழுகும் கண்ணீருக்கு
உவமையாகப் பயன்படுத்துகிறார். தங்க ஒழுகு உறை நீர் என்று
கொடுமைப் படுத்த வேண்டாமென அதை அப்படியே விட்டிருக்கிறேன்.
⦾
நியூயார்க்கில் விழிப்பு
திரைச்சீலைகள்
காற்றோடு மல்லுக்கட்டுகின்றன
உறங்கும் குழந்தை
தேவதையுடன்
கனவுகளை பரிமாற்றம் செய்கிறது.
இந்நகரம்
தூங்காத பேருந்தின்
பிடிமானக் கயிறென இழுபடுகிறது.
நானோ, அலாரம்
தூங்காத, கேட்கப்படாத,
கவனிக்கப்படாத போர் வதந்தி
விடியற்காலை வரை
நீண்டுகிடக்கும் பொய்.
⦾
உன் சருமம் விடியல்
என்னுடையது கஸ்தூரி மான்
ஒருவர் வரைகிறார்
திரைச்சீலை முடிவின் தொடக்கத்தில்
மற்றொருவரோ
சரியான தொடக்கத்தின் முடிவில்.
⦾
நான் மீண்டும் மரணித்துக்கொண்டிருக்கிறேன்
தூக்கத்தில் திறக்கும் குழந்தைகளின் முஷ்டியென
நரம்புகள் சரிந்து.
பழைய கல்லறைகளின் நினைவும்
அழுகும் சதையும் புழுக்களும்
இச் சவாலுக்கெதிராக
என்னை ஆற்றுப்படுத்தவில்லை.
வருடங்களும் பனியும் தோல்வியும்
என் முகத்தில்
ஆழமான கோடுகளாக வாழ்கின்றன.
அவை என் பார்வையை
மேலும் மங்கச்செய்துவிட்டன.
நான் மரணித்துக்கொண்டிருக்கிறேன்
ஏனெனில் நான் வாழவிரும்புகிறேன்.




